Tuesday 15 March, 2011

நங்கை





                நகரின் மிக பிரபலமான பொறியியல் கல்லூரி அதற்கே உரிய சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பாடவேளை  ஆரம்பமானதால் அலுவலக கட்டிடம் சற்று அமைதியாகவே இருந்தது. தேர்ந்த மடிப்புடன் இளம்நீல நிற காட்டன் புடவையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தாள் தன்யா. அந்த கல்லூரியின் ஆங்கில விரிவுரையாளருக்கான நேர்காணல் நடைபெற்று கொண்டிருந்தது.

            அலுவலகத்தினுள் வந்தவர்களும், நேர்காணலுக்கு வந்தவர்களும் தன்யாவை அடிக்கடி கேள்வியாய் பார்த்து கொண்டனர். பல வருடங்களாய் பழகிப் போன இந்த பார்வைகள் அவளை பாதிக்கவில்லை. தன்னுடைய முறைக்காக காத்திருந்தாள். அலுவலக உதவியாளர் அவள் பெயர் சொல்லி சிறு முறுவலுடன் எழுந்து சென்றாள்.

"May I come in Sir", அவளின் கணீர் குரல் ஆங்கில துறை தலைமை பேராசிரியர் ராஜசேகரை சற்று திடுக்கிட்டு நிமிர வைத்தது.

"எஸ் தன்யா?", என்றார் புருவங்கள் கேள்வியாய் நெறிய.

அவளை அமர சொல்லிவிட்டு அவளுடைய கல்வி சான்றிதழ்களை வாங்கி பார்த்தவர் வழக்கமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அவளுடைய பதில்களும், கல்வி தகுதியும் அந்த வேலைக்கு தன்யா மிகப் பொறுத்தமானவள் என்பதை உறுதி செய்தது.

நேர்காணலுக்கான முடிவை நாங்கள் தபால் மூலம் அனுப்புகிறோம்", என்றார் அவர்.

சிறு தயக்கத்தோடு, “Sorry Sir, நீங்க முடிவை உடனே சொன்னால் நான் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை. நான் ஏன் கேட்கிறேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும் ", என்றாள் தெளிவாக.

சிறு தயக்கத்தோடு அவளை வெளியே காத்திருக்க சொன்னவர் நேரே கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றார். வேலை இல்லை என்று சொல்லாமல் காத்திருக்க சொன்னது அவளுக்கு எதிர்பார்ப்பை தந்தது. 30 நிமிட காத்திருப்பிற்க்கு பிறகு அவள் அழைக்கப்பட்டாள்.

கல்லூரி முதல்வர் தமிழரசுவிற்கு எதிரே இருந்த இருக்கையில் தன்யா அமர்ந்தாள். முதல்வர் மற்றும் பேராசிரியர் இருவர் முகமும், ஒரே மாதிரியான உணர்வுகளையே காட்டியது. கண நேர மௌனதிற்கு பின் தமிழரசு பேச ஆரம்பித்தார்.

"நான் என்ன சொல்ல போறேன் என்பதை ஓரளவு யூகித்து இருப்பீங்க.உங்களுடைய தகுதி, திறமை இதிலே எல்லாம் குறை 
சொல்ல முடியாது. ஆனா இது வரை எங்க கல்லூரியிலே...", அவர் முடிக்கும் முன்பு இடை மரித்த தன்யா , "புரியுது sir என்ன மாதிரியான திருநங்கை இது வரை உங்க கல்லூரி வேலைக்கு வந்திருக்க மாட்டாங்க. எனக்கு கல்வி தகுதி, திறமை எல்லாம் இருக்குன்னு நீங்களே சொல்றீங்க. அப்போ consider பண்ணலாமே", என்றாள் கனிவான குரலில்.


                                                                               ---- நங்கை தொடர்வாள்

Tuesday 8 March, 2011

இவளே பெண்



புதிராக வருவாள் - இவள்
புயலையும் அடக்கிடுவாள் அன்பினால்

தென்றலாய் வருவாள் - இவள்
பூக்களுடன் பேசிடுவாள் புன்னகையால்

விருட்சமாய் எழுவாள் - இவள்
வெற்றிக்கு வித்திடுவாள் நுண்ணறிவால்

நெருப்பாய் கொதித்திடுவாள் - இவள்
வியத்தகு மாற்றம் செய்வாள் சிறுசெய்கையால்

பனியாய் குளிர்ந்திடுவாள் - இவள்
பண்பினை வளர்த்திடுவாள் கண்டிப்பினால்

அஷ்ட அவதாரங்கள் எடுப்பாள் - இவள்
இருந்தும் சோர்வடையாள்

இவளே பெண்

Friday 26 November, 2010

வாய்ப்பு


"ஏய் பவித்ரா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?", குழப்பமாய் கேட்டான் வர்ஷன்.

"
இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன்", தெளிவாய் சொன்னாள் பவித்ரா.

"
இப்போ உனக்கு என்ன குறைன்னு, வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ற?", என்றவனிடம்

"
ஒண்ணும் இல்லைங்க, நம்ம கிட்ட குறை ஏதும் இல்லையே நிறைய பணம்தான் இருக்கு, அப்புறம் என் வீணா கஷ்டப்படணும். அதுவும் இல்லாம நாம கனடா போக போறோம், அங்கேயே குடியுரிமை கூட கிடைச்சுடும், நல்லா நிறைய சம்பாதிக்கலாம்....", பவித்ரா சொல்லிக்கொண்டே  போக வர்ஷன் இடைமறித்தான்.

"நிறுத்துடி பணம் இருந்தா தாய்மை உணர்வு இல்லாம போய்டுமா?".

"பணம் குடுத்தா நமக்கு நல்லா ஆரோக்யமான குழந்தை பெற்றுத்தர வாடகை தாய் இருக்காங்க. அப்புறம் என்ன?",

"ஐயோ, நிறுத்து பவித்ரா. நம்ம குழந்தையை நீயே சுமந்து பெத்து, அதுக்கு எல்லாம் பார்த்து பார்த்து நாமலே செய்யறதுலதான் உண்மையான இன்பம் இருக்கு.", என்றான் வர்ஷன் கெஞ்சலாக.

"பணம் இருக்கறதால தான உங்க அம்மா , அப்பா ரெண்டு பேரையும் இங்க நல்லா வசதியான முதியோர் இல்லாமா பார்த்து விட்டுட்டு , நாம வெளிநாடு போலாம்னு சொல்றீங்க", என்றாள் பவித்ரா ஏளனப் புன்னகையுடன்.

"அவங்களை இங்க நல்லா பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அந்த நாட்டின் தட்பவெட்ப நிலை இவங்களுக்கு ஒத்துக்காதுமா. இதுக்காக கிடைக்கற வாய்ப்பை நழுவ விடறது அபத்தம் பவித்ரா.", என்றான் வர்ஷன் தன்  முடிவை நியாயப்படுத்தும் விதமாக.

"
அடுத்தவங்க, நல்லா பார்த்துப்பாங்கதான், ஆனா அவங்களோட அந்திம காலத்துல நாமலே இருந்து பார்த்துக்கற மாதிரி வராதுங்க. எப்படி நம்ம குழந்தையை நான் ஆரோக்யமா இருக்கும் போது, வாடகை தாய் மூலமா பெத்துக்கறது அபத்தமோ, அதே மாதிரி பெத்த பிள்ளைகள் இருக்கும் போது அவங்களை முதியோர் இல்லத்தில் விடறதும் அபத்தம்தான்.", என்றாள் பவித்ரா உறுதியுடன்.

அமைதியாக இருந்தவனிடம், " என்ன பதில் பேச முடியலையா?. இங்கயே நாம நல்லா வாழற அளவுக்கு சம்பாதிக்கலாம். பணம் இருக்கேன்னு உங்க அம்மா, அப்பா உங்களை வேளைக்கு ஆள் வச்சு பார்த்துக்கலையே?. உங்களுக்கு எல்லாமே அவங்களே பார்த்த பார்த்து செஞ்சாங்க. இப்போ உங்க சந்தர்ப்பம். நீங்க அவங்களை கவனிச்சுக்கணும். இப்போ நழுவறது தப்பா தோணலையா?", என்றவளை ஒருவித தெளிவுடன் பார்த்தான் வர்ஷன்.

"
என்னடா வெளிநாடு போற வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டதா பவித்ரா சொன்னா?", என்றார் வர்ஷனின் அம்மா

"
ஆமாம் , உங்களையும் அப்பாவையும் தனியா விட்டுட்டு எங்களுக்கு அங்க போக பிடிக்கலமா", என்ற வர்ஷன் பவித்ராவை நன்றியுடன் பார்த்தான்.

வர்ஷனின் தாய் கண்கள் நிறைய பெருமிதத்துடன் அவனை பார்த்தார்

 

Friday 19 November, 2010

பணத்தை புகையாக்குதல்

                         
"வணக்கம் அண்ணாச்சி"
"
அட, என்ன பாக்கறீங்க, உங்களத்தான். என்னை யார்னு தெரியலையா? ",

"
சரி விடுங்க. பேருந்து நிறுத்தம், தெருவோர தேநீர் கடை, பெரிய அலுவகங்களின் வெளியே இடது ஓரம், இல்லைனா வலது ஓரம், இப்படி எதாவது ஒரு இடத்துல நான் பார்க்க கூடிய நபர் தான் நீங்க. ஆனா உங்களுக்கு என்னை பார்க்க நேரம் இல்லாம போய் இருக்கலாம். ஏன்னா, அப்போலாம் நீங்க உங்க மன அழுத்தம் குறைவதற்காக, பணத்தை புகையாக்குறதுல ரொம்ப மும்முறமா இருந்துருப்பீங்க."

"
நீங்க புத்திசாலி, இப்போ புரிஞ்சிருக்கும் எதை பத்தி பேசறதுக்காக முயற்சி பண்றேன்னு. உங்களுக்கு ரொம்ப பிடித்தமான புகை பிடிக்கும் பழக்கம் பத்திதான் பேச போறேன்."

"
அட என்னடா இது, என் நிலைமை, வேலை பளு எல்லாம் இந்த சின்ன புள்ளைக்கு எங்க புரிய போகுது. அப்படி என்ன தெரியும்னு புதுசா சொல்ல போறா?. ஒரு சின்ன சந்து பொந்து கிடைச்சாலும் போதும், உடனே உள்ள புகுந்து மொக்கை போட ஆரம்பிச்சிடுவாய்ங்க . எங்களுக்கும் தெரியும் இதனால வர விளைவுகள் என்னனுலாம். நிறைய படிச்சுட்டோம்."

"
சரி... சரி...போதுங்க அண்ணாச்சி உங்க புலம்பல் என்னனு எனக்கு நல்லா கேட்குது. நா என்னத்த புதுசா கண்டுபுடிச்சா சொல்ல போறேன். அடிக்கடி நம்ம செய்தி தொடர்பு ஊடகங்கள்தான் இதை பத்தி நிறைய சொல்லுதே. பத்தாததுக்கு மருத்துவர்கள் வேற நம்ம வாய்ல நுழையாத பெயரை எல்லாம் சொல்லி, இந்த விளைவுகள் உங்களுக்கு மட்டும் இல்ல, இந்த பழக்கமே இல்லாத நம்ம சந்ததிகளையும் பாதிக்கும்னு , "ஜல்' புயலை கெளப்புறாய்ங்க."

"
ஹும் நாங்க இதுக்கெல்லாம் கலங்கறவைங்களா",ன்னு நீங்க சொல்றது கேக்குது.
நானும் இது வரும், அது வரும்னு சொல்லி உங்கள பயமுறுத்த வரல.

அதுக்காக இத விட வேணாம்னு சொல்லவும் வரல. விடறதுக்கு முயற்சி பண்ணலாமேன்னு தான் சொல்றேன்.
பலர் புகை பிடிச்சிட்டு நேர வீட்டுக்கு போய் உங்க குழந்தைய தூக்கலாம். உங்க சுவாசத்தில் இருக்கற புகை அந்த  குழந்தையின் சுவாசம் மூலமா அதன் நுரையீரலை பாதிக்கும்.

"
நாங்கதான் அதுக்கு பாக்கு, இன்ன பிற வாசனை பொருட்கள் பயன்படுதரமே.", னு சொல்றீங்க

"
சரி அதெல்லாம் இந்த வாடை பிடிக்காம முகம் சுளிக்கற பெரியவங்களை சமாளிக்க. ஆனா உண்மையில அந்த புகை கட்டாயம் மற்றவர் சுவாசத்தில் கலக்க வாய்ப்புகள் இருக்கு. அதுக்கு என்ன பண்ணுவீங்க? நீங்க அடுத்தவர் உடல் நலம் பற்றி கவலை படாதவரா இருக்கலாம் அண்ணாச்சி, உங்க உடம்பை பத்தியாவது கவலைப்படுங்க."

"
அதுக்கு என்ன பண்ணலாம்னு?", கேட்கறீங்களா. ஏதோ எனக்கு தோனுறதை சொல்றேன், நீங்க உங்களை மாற்றி கொள்ள முயற்சி பண்ணா சந்தோஷம்.

 1.
நீங்க மன அழுத்தம், வேலை பளு இப்படி உணரும் நேரத்துலதான் புகை பிடிக்க போறீங்க. உங்களுக்கு குழந்தைகள் இருக்கா? அவங்களை விட மன அழுத்தம் குறைக்கும் மருந்தை கடவுளால் கூட இனிமே கண்டுபிடிக்க முடியாதுங்க அண்ணாச்சி. உங்க குழந்தை விளையாடற, பேசற, பாடற இப்படி பட்ட நிகழ்வுகள் கட்டாயம் உங்க அதி நவீன செல்பேசியில் பதிவாகி இருக்கும்.உங்களுக்கு புகை பிடிக்க தோணும் போது எல்லாம், அந்த பதிவுகளை எடுத்து பாருங்க. உங்க மன அழுத்தம் கட்டாயம் குறையும்.

2.புகை பிடிக்க வெளியே போகும் போது, உங்க நீண்ட நாளைய நண்பர் அல்லது உறவினர் , இவங்க கூட எல்லாம் பேசணும்னு நினைப்பீங்க ஆனா
தள்ளி போய்கிட்டே இருக்கும். அவங்க கூட பேசுங்க . "ஒவொரு தடவையும் யார் கூடவாவது பேசி பணத்தை வீண் அடிகறதா?",ன்னு. நீங்க உங்க
உடம்பை கெடுத்துக்க பண்ற செலவை இப்படி பண்ணலாம். தப்பே இல்ல. மத்தவங்க கிட்ட நல்லா பெயராவது கிடைக்கும்.

3.
இதே மாதிரி உங்க மனைவி கூடவும் பேசுங்கஅவங்க சும்மா சும்மா  என் வேலைய கேடுக்காதீங்கன்னு  திட்டினா நான் பொறுப்பு இல்ல
அது உங்க குடும்ப விவகாரம்.

4 .
உங்களுக்கு பிடிச்ச நகைச்சுவை பதிவுகளை கூட பார்க்கலாம். மனசு விட்டு சிரிச்சா எரும மாட்டு மேல வர எமன் கூட ஏரோப்ளேன்ல போயிருவான்ல.
ஏதோ இவ்வளவுதான் இப்போதைக்கு தோணுச்சு. இன்னிமே தோணுச்சுன்னா அதை கண்டிப்பா இன்னொரு பதிவுல போடுவேன். இதோட விட்டாளேன்னு
பெருமூச்சு விடாதீங்க. பொறுமையா என்னை திட்டிகிட்டே வாசிச்சதுக்கு நன்றிங்க அண்ணாச்சி.


முகவரி

                                              

சென்றாய் தானாய் சென்றாய் ,
விருப்பம் இருந்தும் பறந்து சென்றாய்

நின்றாய் நேரில் நின்றாய்
தொட்டால் பனியாய் கலைந்து மறைந்தாய்

கனவுகள் காற்றை போன்றே கையில் சிக்க மறுக்கிறது
நினைவுகள் தீயை போன்றே உள்ளம் வரை சுடுகின்றது

நேற்று வரை நம்பிய நொடிகள் கண்முன்னே மறைகிறது
நாளை என்ற நம்பிக்கை இங்கே தூரம் சென்று சிரிக்கிறது

கண் முன்னே தோன்றிய இன்பம் என் பேரை மாற்றி சென்றதும் ஏனோ?
சகுனங்கள் கூட என்னை சகுனத் தடையாய் பார்த்திடுமோ?

விண்ணின் அழகைக் காண மண்ணை விட்டு சென்றதும் ஏனோ?
நீ இன்றி சொந்தங்கள் கூட முகங்கள் மாற்றி சென்றிடுமோ?

தொலைந்ததை தேடித் தோற்றேன்,
புதியதை தேடவும் பயந்தேன்

அடையாளங்கள் மாற்றவும் வெறுத்தேன்,
தானாய் மாறும் என்பதை மறந்தேன்

அந்நியர் பலரின் பார்வைகள் துளைக்க
துணையற்ற வேதனை உணர்ந்தேன்

பாதை மறந்து பாதியில் நின்றேன்
உறவாய் புதிய பாதையை கேட்டேன்

என் நெஞ்சமும் உனக்கு புரியும்
உன் நேசமும் என் மனம் அறியும்

உண்மை நிலையை நீயே அறிவாய்
புதிய முகவரி தேடித் தருவாய்