என் வகுப்பு தோழனே,
கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,
என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,
என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,
தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,
வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,
என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,
நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,
பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,
எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,
சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,
'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,
எப்படி சொல்வது உன்னிடம்?
எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,
உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,
என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,
எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,
எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,
என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,
வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?
பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?
உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்
எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?
என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது
மன்னித்து விடு என்னை?